
புதிய பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்யச் சுப்ரீம் கோர்ட்டு இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
புதுடெல்லி:பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம்மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்தநிலையில், பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராகச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது, பிரமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லையென நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார்.
மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்து விடலாமென நினைக்காதீர்கள் எனப் பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீங்கள் செய்திருப்பது மிகக் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர்.
அத்துடன், புதிய பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 10-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

