
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரணை நடத்தி வந்தார்.
அப்படி ஒரு வழக்கு விசாரணையின்போது, அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென தனது காலணியைக் கழற்றி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நோக்கி வீச முற்பட்டார்.
உடனே அங்கிருந்த நீதிமன்ற காவலர்கள், அந்த வழக்கறிஞரை மடக்கி பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என முழக்கமிட்டார்.
தொடர்ந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்திய நீதிமன்ற காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணையின் போது இப்படியொரு மோசமான சம்பவம் நடைபெற்றதும், நீதிமன்ற வளாகமே பரபரப்பில் ஆழ்ந்தது.
ஆனால், அந்தச் சூழலிலும் நிதானத்தை இழக்காத தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. தொடர்ந்து வாதங்கள் நடக்கட்டும்” என பரபரப்பின்றி அமைதியாக தெரிவித்தார்.இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், நிதானம் காத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், வழக்கு விசாரணையையும் இடை நிறுத்தாமல் தொடர்ந்து வாதிட சொன்னது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பிடிபட்ட அந்த வழக்கறிஞரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முற்பட்ட வழக்கறிஞரின் பெயர் ராகேஷ் கிஷோர் என்பது தெரியவந்தது.
தற்போது ராகேஷ் கிஷோரிடம் டெல்லி காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.



