
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் இளம் பிரதமராக பொறுப்பேற்று, இளமையின் கனவுகளுடனும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுடனும் நாட்டை நவீனப் பாதையில் ராஜீவ் காந்தி வழிநடத்தியதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். நவீன இந்தியா, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், தொலைத்தொடர்பு புரட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுக்கான அடித்தளத்தை தனது தொலைநோக்குப் பார்வையால் அவர் உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களை ஜனநாயகத்தின் மையத்திற்கு கொண்டு வருவதற்காக, வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்தது ராஜீவ் காந்தியின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று என ஜோதிமணி தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் மூலம், கிராமப்புறப் பெண்கள் அரசியல் மற்றும் முடிவெடுக்கும் அமைப்புகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்த தன்னைப் போன்ற ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் அரசியலில் நுழைந்து மக்களுக்காகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளின் பின்னணியில், ராஜீவ் காந்தி முன்னெடுத்த ஜனநாயகப் புரட்சிக்கும் முக்கிய பங்கு இருப்பதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். இன்றைய இந்தியாவில் காணப்படும் இளைஞர் எழுச்சி, டிஜிட்டல் புரட்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன்பே ராஜீவ் காந்தி கண்ட கனவுகளின் தொடர்ச்சியே என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால இந்தியாவைக் கனவு கண்ட அந்த இளம் பிரதமரின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் நவீன இந்தியாவை உருவாக்க அவர் ஆற்றிய பங்களிப்பிற்கும் தனது நெஞ்சார்ந்த அன்பையும் மரியாதையையும் செலுத்துவதாக ஜோதிமணி கூறியுள்ளார். நவீனமான, சமத்துவமான, இளைஞர்களின் சக்தியால் முன்னேறும் இந்தியா என்ற ராஜீவ் காந்தியின் கனவு தொடர்ந்து நமக்கு வழிகாட்டட்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.




