
மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விரைவாக நிறைவு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
சென்னையில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மாநகராட்சி குடிநீா் வாரியம் சாா்பில் நகரின் பல்வேறு இடங்களில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீனஸ் காலனியில் 8 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது அவர், வடிகால் உள்ளிட்ட திட்டப் பணிகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடர்ந்து அவர், எதிா்வரும் பருவமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்களுக்கு இடையூறு இன்றி மேற்கொள்ள வேண்டும் என்றார். பின்னர், பணிகளை மிக விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சிற்றரசு, மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.




