
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னையில் மாநில பாஜகவினருடன் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைக் கட்சித் தலைமை நியமித்துள்ளது.
இதேபோல் இணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோகோல் ஆகியோரை நியமித்துள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் இன்று சென்னைக்கு வந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்குப் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதன்பின்னர் தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களான பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் முருகன், எச்.ராஜா, தமிழிசை, வானதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணித் தொகுதிப் பங்கீடு குறித்தும், எந்தெந்தத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்தும் பேச்சு நடத்த உள்ளார்.



