Advertisements

தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்க, தமிழக அரசு டெண்டர் கோரியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் வசம் இருந்த தூய்மைப்பணியை மீண்டும் அரசே எடுத்து நடத்த வேண்டும் என்றுதான் போராட்டம் நடந்திருந்தது. இப்படி இருக்கையில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசு, தனியார்மய முயற்சிகளை மேற்கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி, தாம்பரம், வேலூர், கோயம்புத்தூர் என மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் தூய்மைப்பணிகளை பொது-தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள புதிய டெண்டர்களை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. இந்த டெண்டர்தான் தற்போதைய சலசலப்புகளுக்கு காரணம்.கடந்த திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டும், கூவம் ஆற்றில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தூய்மை பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ள தனியார் நிறுவனம் குறைந்தபட்ச கூலியை உறுதி செய்யவில்லை என்றும், சமூக பாதுகாப்பான வேலையை வழங்கவில்லை என்றும், உயிரை கொடுத்து வேலை செய்தும் ஒய்வூதியம் கூட கிடைக்கவில்லை என்றும் கூறி தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.போராட்டக்காரர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, இரவோடு இரவாக அவர்களை கைது செய்தது திமுக அரசு. இந்த கைது நடவடிக்கை சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் மக்களின் மனசாட்சியை உலுக்கியிருந்தது. விடிந்தால் சுதந்திர தினம். ஆனால், தூய்மைப்பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு, போராட விடாமல் தடுக்கப்பட்டனர். திமுக அரசின் இந்த நடவடிக்கையை தவெகவும் கண்டித்திருந்தது.தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய விஜய், தூய்மைப்பணியில் ஈடுபட்டிருக்கும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இப்போது விஜய் முதலமைச்சராக ஆகியிருக்கும் நிலையில், தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்க டெண்டர் விடப்பட்டிருப்பது விஜய் மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, அனைத்து தூய்மைப்பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தவெக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே தவெக அரசு டெண்டரை ரத்து செய்து, வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் .ஒருவேளை தவறும் பட்சத்தில், இப்போது விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு அப்படியே சரியும். திமுகவை தீய சக்தி என்று விமர்சித்துவிட்டு, தன்னை தூய சக்தி என்று சொல்லிக்கொள்ளும் விஜய் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
Advertisements




