
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவருக்கு 101 வயது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சினேகன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் /அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமாகி விட்டார் என்ற துயர தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ‘புத்தம் புது பூவே’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அடுத்து ‘மனு நீதி’, ‘பாண்டவர் பூமி’, ‘மௌனம் பேசியதே’, ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘பகவதி’. ‘சொக்கத்தங்கம்’ என பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘திரு.மாணிக்கம்’ படத்தில் பாடல் எழுதினார். சினிமாவை தாண்டி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் சினேகன்.
இவர், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .




