
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அழைத்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். அப்போது அவர்களின் மருத்துவ செலவு, கல்வி செலவு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தான் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த 27-ம் தேதி விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காணொலிக் காட்சி மூலம் ஆறுதல் கூறிய விஜய், நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்க காவல்துறை அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பில் கூறப்படும் நிலையில், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜயை சந்திக்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் இன்று விஜய் நேரில் சந்திப்பு ஆறுதல் கூறினார்.
கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் உள்ளிட்டோரும் சென்னை வந்தடைந்தனர். கரூர் துயரம் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு அதாவது அக்டோபர் 27ஆம் தேதியான இன்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை விஜய் கேட்டறிந்தார்.அப்போது கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினரிடம், அவர்களுடைய மருத்துவ செலவு, கல்விச் செலவுகளை ஏற்பதாகவும், வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.



