Trichy:சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு!

Advertisements

சமூக வலைதளங்களில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாகச் சீமான் உள்ளிட்ட 22 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி:திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரை முருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர்மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை இழிவுபடுத்தி பேசியதாகச் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதனிடையே திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாகச் சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரிக்கை விடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவரைத் திருச்சி தில்லை நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர்மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *