
இஸ்ரேலில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுடன் பேச்சு நடத்துவதுடன், நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளார்.
இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பலதுறைகளில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இன்றும் நாளையும் தான் இஸ்ரேலில் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இருநாடுகளிடையான உறவுகள் கடந்த மூன்றாண்டுகளில் குறிப்பிடத் தக்க அளவில் வலுப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையே உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுடன் பேச்சு நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சோக்கையும் சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று மாலையில் இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் உரையாற்ற உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்திய – இஸ்ரேல் உறவை வலுப்படுத்தப் பங்களித்த இந்திய வம்சாவளியினருடனும் கலந்துரையாட உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.




