
ஐந்து நாடுகளுக்கான தனது அரசுமுறைப் பயணத்தின் முதற்கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 15) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரைச் சென்றடைந்தார்.
பிரதமர் பயணித்த ஏர் இந்தியா 1 விமானம் அமீரக வான்வெளிக்குள் நுழைந்தபோது, அந்நாட்டு விமானப்படையின் F-16 போர் விமானங்கள் புடைசூழப் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டது தனிச்சிறப்பாகப் பார்க்கப்பட்டது.
அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமரை, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் நேரில் வந்து கட்டித்தழுவி உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையில், இந்தியாவில் 5 பில்லியன் டாலர் (சுமார் ₹42,000 கோடி) முதலீடு செய்ய அமீரகம் ஒப்புக்கொண்டுள்ளது.
எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு இந்திய மக்களுக்குக் கிடைத்த பெருமை எனக் குறிப்பிட்ட பிரதமர், அமீரகத்தைத் தனது இரண்டாவது வீடு எனச் சிலாகித்தார்.
இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் சூழலில், எண்ணெய் வளம் மிக்க அமீரகத்துடன் ஏற்பட்டுள்ள இந்த உறவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.




