
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்தச் சமரசமும், இரட்டை நிலைப்பாடும் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இந்தியா – நார்டிக் நாடுகள் இடையான மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது. நார்டிக் நாடுகளுடனான நமது உறவுக்குப் புத்துயிரூட்டவும் விரைவுபடுத்தவும் எட்டாண்டுகளுக்கு முன் இந்த அமைப்பைத் தொடக்கியதாகக் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில் இந்த நாடுகளுடனான உறவுகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பத்தாண்டுகளில் இந்த நாடுகளுடனான வணிகம் நால்மடங்கு பெருகியுள்ளதாகவும், இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள முதலீடு 200 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வணிக உடன்பாடு செய்துகொண்டதையும், அந்த அமைப்பில் டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியன இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் நார்டிக் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் ஒரு பொற்காலத்தை அடையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நமது விரிவான ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியன இருநாடுகளுக்கு இடையான கூட்டாண்மையின் தூணாக உள்ளது. இதை வலுப்படுத்தப் பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் ஆகியவற்றுக்கிடையான இணைப்புகளை அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். துருவப் பகுதிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் தொடர்பாகத் தெளிவான, ஒருங்கிணைந்த நிலைப்பாட்டைத் தாங்கள் கொண்டிருப்பதாகவும், அதில் எந்தச் சமரசமும் கிடையாது என்றும், இரட்டை நிலைப்பாடு கிடையாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


