
ராமதாஸும் அன்புமணியும் மீண்டும் இணைந்தால் நான் பாமகவில் இருந்து வெளியேற தயார் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் சமரசம் செய்யவே தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜி.கே.மணி, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ராமதாஸும் அன்புமணியும் மீண்டும் இணைந்தால் நான் கட்சியிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறேன். அன்புமணி யாரையெல்லாம் துரோகி என சொல்கிறாரோ அவர்களும் வெளியேறுவர்.
நானோ என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்து விடுகிறேன். வேறு கட்சியிலும் இணைய மாட்டோம், அவர்களாக அழைத்தால் பாமகவில் இணைகிறோம்.
ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் ராமதாஸ், அன்புமணியை சமாதானம் செய்யவே தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை அழைத்து அன்புமணி பாராட்டினார்.
ராமதாஸுடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார். கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கூட மிக கடுமையாக அன்புமணி விமர்சித்திருந்தார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான்தான் என அன்புமணி அவதூறாக பேசி வருகிறார். ஆட்சி மாற்றம் காரணமாக அந்த இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமாவேன்? என ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.




