
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் ஒன்று வரை ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜப்பான் பிரதமர் சிகேரு இசிபாவின் அழைப்பை ஏற்றுப் பிரதமர் மோடி ஆகஸ்டு 29 அன்று அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்ல இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 29, 30 ஆகிய இருநாட்களிலும் ஜப்பானில் இருக்கும் பிரதமர் மோடி, அங்கு இந்திய – ஜப்பான் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வணிகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஆகஸ்டு 31ஆம் நாள் சீனாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு தியாஞ்சின் நகரில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பை அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அந்த மாநாட்டின் இடைவெளியில் அதில் பங்கேற்கும் தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளார்.


