
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இருமுனைப் போட்டி இருந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என நினைத்து விஜய் செயல்பட்டால் நல்லது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயணம் என்னும் பெயரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் நாகேந்திரனின் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. அதன்பின் திருச்சி பாஜக அலுவலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போலி மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்று குறிப்பிட்டார்.திமுக இருக்கக் கூடாது எனச் சொல்லும் விஜய், தேர்தலில் இருமுனைப் போட்டி இருந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என நினைத்துச் செயல்பட்டால் நல்லது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


