
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துத் தில்லியில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தின் முன் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் இடைக்கால அரசின் ஆட்சியில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்து அமைப்பைச் சேர்ந்த இளைஞர் தீபு சந்திர தாசை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அடித்துக் கொன்றனர்.
இது தொடர்பாக ஏழு பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை முன்னிட்டுத் தில்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் காவல்துறைப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
காவல்துறையினர் மிகப்பெரிய தடுப்புகளை வைத்திருந்தும் அதை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். ஒரு கட்டத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் காவலர்களைத் தள்ளிக்கொண்டு செல்ல முயன்றனர்.
இதேபோல் தில்லி மெட்ரோ ரயில் நிலையம் முன் இந்தி வங்காளிக் கூட்டமைப்பு, விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வங்கதேசத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கொத்தப்பேட்டையில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கதேசத்தில் உள்ள இந்துக்களைக் காக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.=



