
சென்னையில் நாளை முதல் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) நாய் இனங்களை வாங்கி வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்க மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்லப்பிராணி உரிமையாளர்கள் பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் மற்றும் புகார்கள் அதிகமாக பெறப்பட்டு வருகின்றன. இவற்றில் பெருமளவு சம்பவங்களில் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன நாய்களின் ஆக்ரோஷமான குணநலன்களால் அதிகளவு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் , நாளை (டிசம்பர் 20) முதல் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கு தடை விதிக்கவும் மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதற்கு தடைவிதிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும் போது அவற்றிற்கு கழுத்துப்பட்டை மற்றும் வாய்க்கவசம் அணிவிப்பதை கட்டாயம் ஆக்கவும், இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

