
ஆங்கிலேயர் காலத்து பார்லி., கட்டடத்துக்கு விடை கொடுக்கும் வகையில், அதனருகே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, அதிநவீன வசதிகளுடன், புதிய பார்லி., கட்டடத்தைக் கட்டி உள்ளது…
புதுடில்லி: பழைய பார்லிமென்ட் கட்டடத்திற்கு பிரியா விடை கொடுத்து, இன்று முதல் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் லோக்சபா, ராஜ்யசபா நடக்கிறது. இதற்காக இரு அவைகளிலும் உள்ள 750 எம்.பி., க்களுடன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஒன்றாக நின்று ‘குரூப் போட்டோ’ எடுத்துக்கொண்டனர்.
ஆங்கிலேயர் காலத்து பார்லி., கட்டடத்துக்கு விடை கொடுக்கும் வகையில், அதனருகே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, அதிநவீன வசதிகளுடன், புதிய பார்லி., கட்டடத்தைக் கட்டி உள்ளது. பழைய பார்லி., கட்டடத்தில், சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இன்று முதல் வரும் 22 வரை, புதிய பார்லி., கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
பழைய பார்லி., கட்டடத்திற்கு பிரியா விடை கொடுத்து, புதிய பார்லி., கட்டடத்திற்குள் நுழைவதை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்ட இரு அவைகளை சேர்ந்த 750 எம்.பி., க்கள் ஒன்றாக நின்று ‘குரூப் போட்டோ’ எடுத்துக்கொண்டனர்.
குரூப் போட்டோ எடுக்கும்போது பா.ஜ., எம்.பி., நர்ஹரி அமீன் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு அவருக்கு மயக்கம் தெளிய உதவினர். சிறிது நேரத்திற்கு பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் அவர் அனைவருடனும் சேர்ந்து போட்டோ எடுத்தார்.

