
மகாராஷ்டிரத்தின் கனிமவளத்தில் முக்கால் பங்கு விதர்ப்பா பகுதியில் உள்ளதாகவும், அதன்மூலம் சீனாவைவிடக் குறைந்த விலையில் உருக்கை உற்பத்தி செய்ய முடியும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தொழிற் கண்காட்சியை மத்தியச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடக்கி வைத்தார். அதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரத்தின் கனிமவளங்களில் முக்கால் பங்கு விதர்ப்பா பகுதியில் இருப்பதாகத் தெரிவித்தார்.
நிலக்கரி, மாங்கனீசு ஆகியனவும் உலகிலேயே தரமான இரும்புக் கனிமமும் இங்குள்ளதாகக் குறிப்பிட்டார். விதர்ப்பாவில் உள்ள உலகத் தரமான இரும்புக் கனிமத்தைக் கொண்டு இந்தியாவை உலகின் உருக்கு மையமாக மாற்ற முடியும் என்றும், சீனாவைவிடக் குறைந்த விலையில் உருக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும் நிதின்கட்கரி குறிப்பிட்டார்.
விதர்ப்பாவில் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலையைத் தொடங்குவதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளதாகவும், இதனால் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.



