
தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்று பெறாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பக் கூடாது என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
தில்லியிலும் அதைச் சுற்றியுள்ள பிற மாநிலப் பகுதிகளான குருகிராமம், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ளதால் வானில் கரிப்புகை சூழ்ந்துள்ளது.
இப்போது குளிர்காலம் என்பதால் பனிமூட்டத்துடன் புகைமூட்டமும் சேர்ந்து தில்லியில் மாசுபாடு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பார்வைப் புலப்பாட்டுத் தூரம் குறைந்துள்ளது. இதனால் பகல் பொழுதிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டுச் செல்கின்றன.
இந்நிலையில் தில்லியில் வாகனங்கள் வெளியிடும் புகைமாசின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்று பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்க வேண்டும், சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டுச் சான்று பெறாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்று பெறும் இடங்களுக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் படையெடுத்துள்ளனர்.
எரிபொருள் நிலையங்களில் இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்டறியத் தில்லிப் போக்குவரத்துக் கழகம் ஆட்களைப் பணியமர்த்தியுள்ளது.

