
பா.ஜ.க. அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் சான்றாக அமைந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்து தில்லியில் இருந்து சென்னைக்குத் திரும்பிய திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவு நாளில் மக்களவையில் அறிமுகப்படுத்திய 3 சட்டங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழி தொண்டி புதைக்கும் மிக மோசமான சட்டங்களாகும் எனத் தெரிவித்தார்.
30 நாட்கள் சிறையில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்க வகை செய்யும் அந்த மசோதாக்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் நாடாளுமன்றக் கூட்டு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார்.
பாசிசத்தின் உச்சம் என்று சொல்லக் கூடிய வகையில் சட்டங்களை பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மோசமான கருப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதல் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
பா.ஜ.க. அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்த இந்தக் கூட்டத் தொடர் சான்றாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


