
என்.டி.ஏ. கூட்டணிக்கு செல்வதற்கு த.வெ.க.வின் 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனித்தே போட்டி எனக் கூறியிருந்த தவெக, சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியாக தகவல்கள் வெளியானது.
அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே அக்கட்சியின் தலைவரும் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு எனக் கூறியிருந்தார். இதனால் தவெக கூட்டணியோடு போட்டியிட விரும்புவது தெளிவானது. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டின் பழைய கட்சிகள் எதுவும் தவெகவுடன் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டவில்லை.
அதிமுகவிற்கு விருப்பம் இருந்தாலும், தவெகவாக வந்து பேசவேண்டும் என எதிர்பார்த்தது. ஆனால் தவெக பக்கமோ விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலைப்பாடு இருந்தது. இதனால் இருதரப்பும் எந்த பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கவில்லை.
இதனிடையே விஜய் திமுகவைப்போல அதிமுகவையும் விமர்சிக்க தொடங்கினார். இதனால் அந்தப் பேச்சு அப்படியே நின்றது. மேலும் கொள்கை எதிரி எனக்கூறிய பாஜக, அதிமுக கூட்டணியில் இருப்பதாலும் இந்த பேச்சு கைவிடப்பட்டது.
தனது தலைமையிலான கூட்டணிக்கு விஜய் வருவார் என்று அதிமுக இலவு காத்த கிளியாய் காத்திருந்து வீணாய்ப் போயிற்று.
இச்சூழலில் கடந்த சில நாட்களாக பாஜக விஜய்யை கூட்டணியில் இணைக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தவெக தெரிவி்த்தது.
தவெகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றதாகவும், அவர்களில் 98 மாவட்ட செயலாளர்கள் என்டிஏ கூட்டணிக்கு செல்ல ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது பாஜக கூட்டணிக்கு செல்லும் வழியை உறுதிப்படுத்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்…



