National Horse Day: தேசிய குதிரை தினம்!

Advertisements

கால்நடைகளில் மிகவும் உயரிய இடத்தில் நாம் வைத்து கொண்டாடுவது குதிரையைத் தான். மிக வேகமாக ஓடக் கூடியது.

படைகளில் காலாட்படைக்கு அடுத்து குதிரைப்படை முக்கிய அங்கம் வகிக்கிறது. குதிரை அக்காலத்தில் மன்னர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர். குதிரை குதித்து ஓடியதைப் பார்த்துக் குதிரை எனப்பட்டது; பரிந்து (வேகமாக) ஓடுவதைப் பார்த்துப் பரி என்றழைக்கப்பட்டது.

குதிரை Equus ferus caballus, குடும்ப வகையைச்  சேர்ந்தது.  ஆங்கிலத்தில்  horse என்பர். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி. குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பயன்படுத்தப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. இதன் சதை, தோல், எலும்பு, முடி மற்றும் பல் போன்றவை பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. நின்று கொண்டே தூங்க வல்லவை.

ஃபோல் (Foal) அல்லது குட்டிக்குதிரை:

ஒரு வயதிற்கும் குறைவான ஆண், பெண் குதிரைகள் பொதுவாக ஃபோல் என்று அழைக்கப்படுகின்றன.
யார்லிங் (Yearling):
ஒன்று முதல் இரண்டு வயது ஆண், பெண் குதிரைகள் இரண்டும் யார்லிங் என்று அழைக்கப்படும்.
கோல்ட் (Colt):
நான்கு வயதிற்கு உட்பட்ட இளம் குதிரைகளைக் குறிக்க இச்சொல் பயன்பட்டாலும், நான்கு வயதிற்கு உட்பட்ட இளம் ஆண் குதிரைகளை மட்டுமே இச்சொல்லால் அழைக்கலாம்.
ஃபில்லி(Filly):
நான்கு வயதிற்கு உட்பட்ட இளம் பெண்குதிரைகளை ஃபில்லி எனலாம்.
மேர்(Mare):
நான்கு வயது அல்லது அதற்கு மேற்பட்ட நலமான பெண்குதிரைகளை மேர் ‘ என்பர்.

பொலிக்குதிரை:

நன்கு வளர்ச்சியடைந்த பாலியல் கூறுகள் உள்ள நான்கு வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் குதிரைகளை பொலிக்குதிரை அல்லது ஸ்டாலியன் (Stallion) என்பர்.
கேல்டிங் (Gelding) அல்லது ஆண்மை நீக்கிய குதிரை:
விதைகள் நீக்கிய எந்த வயதுக் குதிரையும் ஆண்மை நீக்கிய குதிரை என அழைக்கப்படும்.

வாழ்நாள்;

இனம், மேலாண்மை மற்றும் சூழலைப் பொறுத்து, நவீன ரகக்குதிரை 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது. குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரைக் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன. ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில குதிரைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கூட உயிர் வாழ்ந்துள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் மூலமாக 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய பெல்லி என்று அழைக்கப்பட்ட குதிரையானது சுமார் 62 வயது வரை வாழ்ந்துள்ளது என்று அறியப்பட்டுள்ளது. நவீன காலத்தில், 2007ம் ஆண்டு தனது 56வது வயதில் உயிரிழந்த, சுகர் பஃப் எனும் குதிரையே உலகில் வயதான குதிரையாக கின்னசு உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உயரம்:

ஒரு சராசரிக் குதிரையின் உயரமானது அதன் கழுத்தும் உடலும் சேரும் பகுதியின் அதிக பட்ச உயரப்பகுதியைக் கொண்டு கணக்கிடப் படுகிறது. ஏனெனில் குதிரையின் தலை மற்றும் கழுத்தைப் போல இந்த பகுதி அதன் உடம்பின் அசைவைப் பொறுத்து மேலும் கீழும் செல்லுவது இல்லை. சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குலம் உயரம் வரை வளரும்.

குளம்புகள்:

இரை விலங்குகளாக இருப்பதால் கால்களும் குளம்புகளும் ஒரு குதிரையின் மிக முக்கியமான உறுப்புகள் ஆகும். குளம்பின் வெளிப்பகுதி மனிதனின் விரல் நகங்களில் உள்ள வகைப் பொருளால் ஆனது. வளர்க்கப்படும் குதிரைகளில் மிகுதியான பயன்பாட்டின் காரணமாக குளம்புகள் தேய்ந்துவிடாமல் இருக்க இரும்பிலான லாடங்களைப் பொருத்துவர். குதிரைகள் வளரும்போது குளம்புகளும் வளர்வதால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை லாடங்களை மாற்ற வேண்டியிருக்கும்.

பற்கள்:

ஒரு குதிரையின் வயது மதிப்பீடு அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும். குதிரையின் வாழ்நாள் முழுவதும் அதனுடைய பற்கள் வளர்ந்து கொண்டே இருந்தாலும் தொடர்ந்து மேய்ச்சலில் ஈடுபடுவதினால் அப்பற்கள் தேய்ந்து கொண்டும் இருக்கும்.

குதிரையின் கண்:

குதிரைகள் தங்கள் வாழிடத்தில் கொன்றுண்ணிகளால் தாக்கப்படும் வாய்ப்புள்ளதால் மனிதர்களை விட மேம்பட்ட உணர்திறனைக் கொண்டுள்ளன. குதிரைகளின் பார்வைத்திறன் சிறப்பானது. தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது. இவற்றால் இரு கண்களால் 65 பாகை வரையும் ஒற்றைக் கண் பார்வையில் 350 பாகைக்கு மேலும் பார்க்கவியலும்.

குதிரைகளின் கேட்கும் திறனும் அதிகம். இவற்றால் தமது காது மடல்களை 180 பாகை வரை திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலே எந்தப் பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும். இவற்றின் தொடுதிறனும் நுட்பமானது. கண், காது, மூக்குப் பகுதிகள் உணர்ச்சி மிகுந்தவை. குதிரையின் தொடுதிறனானது தன் உடம்பில் ஒரு சிறு பூச்சி அமர்ந்தால் கூட அறியுமளவுக்கு நுட்பமானது.

தனக்குப் பிடித்தமான தீனியைத் தேர்ந்தெடுத்துப் பிரித்து உண்ணுமளவுக்கு இவற்றின் சுவைதிறன் உள்ளது. குதிரைகள் பொதுவான நச்சுத்தன்மையுள்ள தாவரங்களை உண்பதில்லை.

மனிதர்களுடன் இடைவினை:

இந்தியாவில் உள்ள பிம்பெடகாவில் உள்ள பாறை ஓவியம் – குதிரை ஓட்டும் மனிதன்
உலகெங்கும் குதிரைகள் பல நூற்றாண்டுகளாக மனிதக் கலாசாரத்துடன் ஒட்டி பங்கேற்றுள்ளன. குதிரைகள் வேலை வாங்கவும்  விளையாட்டுக்களிலும், மனமகிழ்விற்காகவும் போர்க்காலங்களிலும் அலங்கார அணிவகுப்புக்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

குதிரையேற்றம்:

பழங்காலத்தில் பலதரப்பட்டோர் கற்று பயன்படுத்தும் ஒரு திறனாக குதிரையேற்றம் இருந்தது. குறிப்பாக குதிரைப்படை வீரர்கள் குதிரையேற்றம் கற்றனர். குதிரை போக்குவரத்து விலங்காகவும், வேளாண்மை செயற்பாடுகளுக்கும் பயன்பட்டது. இக்காலத்தில் குதிரையேற்றம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகவும் இருக்கிறது.

குதிரைப் பந்தயம் என்பது ஒரு குதிரைச்சவாரி விளையாட்டு ஆகும். மேலும் இது முக்கிய சர்வதேச துறையாக உள்ளது. உலகில் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் இது பார்க்கப்படுகிறது.

போரியல்:

குதிரைப் படைகளை பண்டைய காலம் தொட்டே போரில் பயன்படுத்தி வருகின்றனர். சங்ககாலத் தமிழக அரசர்கள் வைத்திருந்த 4 நிலப்படைகளுக்குள் பரிப்படை என்ற குதிரைப்படையும் அடக்கம். இந்திய 64 ஆயகலைகளில் இக்குதிரையேற்றம் பற்றிய பரிநூலும் அடக்கம்.

உடல் வலுசார் பணிகளுக்கு குதிரைகளே நெடுங்காலமாக பயன்பட்டு வந்துள்ளன. இதனாலேயே இவற்றுக்கு மாற்றாக உள்ள இயந்திரங்களின் திறன் குதிரைத் திறனால் வரையறுக்கப்பட்டுள்ளன. மோட்டார் இயந்திரங்களுக்கு  எண்ணுடன் ஹார்ஸ் பவர் என்று குறிப்பிடுவர்.

சூரியன் மற்றும் சந்திரன் தேர்களை இழுக்க குதிரைகள் சித்தரிக்கப்படுவதும் உண்டு. சீன நாட்காட்டியில் 12-ஆண்டு சுழற்சியில் வரும் விலங்கு ஆண்டுகளில் குதிரையும் உள்ளது.[28]. மேலும் சதுரங்க விளையாட்டில் குதிரைப் படை முக்கியமான ஒன்று.

உடல் மற்றும் உளநலம் குன்றிய அனைத்து நோயாளிகளும் குதிரையுடன் பழகும்போது பயனடைகிறார்கள். மருத்துவக் குதிரையேற்றம் மூலம் இவர்களுக்கு புத்துணர்ச்சி வழங்குவதுடன் அவர்களது சமநிலை மற்றும் உறுப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்தி தன்னம்பிக்கையை ஊட்டுகிறது; இதனால் அவர்களுக்கு விடுதலை உணர்வும் தானியங்கு நம்பிக்கையும் பெறுகின்றனர்.[30] குதிரையேற்றத்தின் நன்மைகளை அங்கீகரித்து மாற்றுத்

திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குதிரையேற்றப் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஹிப்போதெரப்பி என்று இவை குறிப்பிடப்படுகின்றன.
பயன்தரும் பொருட்கள்;
மனித வரலாறு முழுவதும் குதிரைகள் மூலமாக மனிதன் பல பொருட்களைப் பெற்று வந்துள்ளான். குதிரையின் பால் பொருட்கள், இறைச்சி போன்றவற்றை மங்கோலியர் பயன்படுத்துகின்றனர். முற்காலத்தில் நீண்ட தொலைவு பயணம் செய்யும் மங்கோலியர் குதிரையின் குருதியையும் குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களால் உணவுக்காக நிற்காமல் நீண்ட தொலைவு செல்ல முடிந்ததாம். மேலும் சினையுற்ற குதிரையின் சிறுநீரில் இருந்து ஒரு வகை நொதி பிரித்தெடுக்கப்பட்டு அது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குதிரையின் தோல் கையுறை, காலணிகள் செய்யப்படுகிறது. குதிரையின் குளம்புகளில் இருந்து விலங்குப் பசை செய்யப்படுகிறது.

சென்னை கிண்டியில் குதிரை ரேஸ் கோர்ஸ் உள்ளது. வசதி படைத்தோர் இப் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *