
ஒலிம்பிக்கில் இந்தியா பாதிக்கு மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்கவில்லை என்றும், அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்றால்தான் அதிகப் பதக்கங்கள் வெல்ல முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மை பாரத் கேலோ இந்தியா அமைப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது, நாட்டில் இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை வளர்க்கும் மிகச் சிறந்த தளமாக கேலோ இந்தியா விளங்குவதாகவும், இளம் வீரர்கள் வீராங்கனைகளின் விளையாட்டுக் கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்புகளை இது வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பதக்கங்களை வெல்வது மட்டும் விளையாட்டின் நோக்கமன்று என்று தெரிவித்தார். விளையாட்டுத் திறமைகளையும், இளைஞர்களின் ஆற்றல்களையும் வளர்ந்த இந்தியா இலக்கை அடைவதற்காக இயக்கமாக ஒருங்கிணைப்பதே விளையாட்டுத் துறை நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.நூறாண்டுகளுக்கு முன் மேஜர் தியான் சந்த் இடம்பெற்ற இந்திய இராணுவத்தின் ஹாக்கி அணி நியூசிலாந்துக்குச் சென்று விளையாடியதைக் குறிப்பிட்டார்.
விளையாட்டுத் துறையில் வெற்றி பெறுவது என்பது தனிமனிதருக்கு மட்டும் அல்லாமல் அவர் குடும்பம், பள்ளி கல்லூரி மாவட்டம் மாநிலம் ஆகியவற்றுக்கான அங்கீகாரத்தை வலுப்படுத்துவது ஆகும் என்று தெரிவித்தார்.
தடகள வீரர்கயின் பெயரைக்கொண்டே ஒரு நகரம் அல்லது மாநிலத்தை உலகம் அடையாளம் காண்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஒலிம்பிக்கில் ஏராளமான விளையாட்டுகள் நடைபெறுவதாகவும், இவற்றில் பாதியில் கூட இந்திய அணிகள் பங்கேற்பதில்லை என்றும் குறிப்பிட்டார். 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா 13 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றதாகவும், இருபதுக்கு மேற்பட்ட விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கவில்லை என்றும், பல விளையாட்டுக்களைக் கேள்விப்பட்டதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தியா அதிகப் பதக்கங்களை வெல்ல வேண்டுமெனில் அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.





