
இன்றியமையாப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் நாளை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இன்றியமையாப் பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறிகள் ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், உணவுப் பொருட்கள் பதுக்கலைத் தடுத்து, விலையைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவும், டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கவும் வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நாளை டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று வீரபாண்டியன் கூறினார்.



