Chennai Suburban Railway: ரெயில் சேவை நிறுத்தம்!

Advertisements

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின்சார ரெயில் சேவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

சென்னை: சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரெயில் சேவை. குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தைக் கொடுப்பதால், அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது.

அந்த வகையில், மின்சார ரெயில் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகாலை 3.45 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 1 மணிவரை இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்கெட்-அரக்கோணம், மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடங்களில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடற்கரை-வேளச்சேரி இடையிலான பறக்கும் ரெயில் சேவையில் 4-வது வழித்தட பணி காரணமாகச் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வரையில் மட்டுமே தற்போது ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின்சார ரெயில் சேவை, பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெற்கு ரெயில்வே சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வரையிலான ரெயில்கள், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *