
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீ நளநாராயண பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பிரபல கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சியாக நடைபெற்றது. அதன் ஒருபகுதியாகக் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீ நளநாராயண பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.
அதிகாலை 4மணிக்கு பெருமாள் திருப்பள்ளியெழுச்சியும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீநளநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகத் தங்க கவச அலங்காரத்தில் பரமபதவாசல் வழியே எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

