
நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் வந்து கொண்டே உள்ளதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் கூட நிரம்பி விடும்.
முக்கியமாக சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் வெளியூரிலிருந்து வந்து வேலை செய்வதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வர். பண்டிகை மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து வரும் சூழலில்,முன்பதிவு நிரம்பி விடும் அச்சமயங்களில் மக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை நாடுவார்கள். பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
மக்களின் இந்த அவசரத் தேவையை பயன்படுத்திக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி வருவதாக நீண்ட நாட்களாகவே புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் – ரூ.3700 என்றும் தற்போது ரூ.4100 வரை வசூலிக்கப்படுகிறது.
மக்களின் அவசர தேவையை அறிந்து கட்டணம் அதிக அளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

