
நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் பாலியல் தொல்லை செய்த அரசு மருத்துவரைப் போலீசார் கைது செய்து 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகை தனியார் மருத்துவமனையில் மூத்த மருத்துவர் அங்குள்ள பயிற்சி பெண் மருத்துவருக்குப் பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல் அளித்ததன் காரணமாக அந்தப் பயிற்சி பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த கட்டமாக நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங் என்பவர் அங்குள்ள பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவம் பயின்று வரும் மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கோட்டார் காவல் நிலையத்திற்கு மாணவிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பெண் மருத்துவர் ரேஷ்மா கோட்டார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோட்டார் போலீசார் இந்தச் சம்பவத்தில், ஆபாசமாகப் பேசுதல், கடத்தல், பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

