
மது அருந்தப் பணம் தராததால் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே நகரில் 29 வயது வெல்டர் ஒருவர் மது வாங்க பணம் தர மறுத்ததால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அதிகாலை 1 மணியளவில் நடந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தானேவில் வசிக்கும் 29 வயதான வெல்டர் ஒருவர், அதிகாலை 1 மணியளவில் வாக்லே எஸ்டேட்டின் ராம் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்து இயற்கை உபாதைகளைக் கழித்துள்ளார். தொடர்ந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அதேபகுதியில் வசிக்கும் 32 வயதான குற்றவாளியைச் சந்தித்துள்ளார்.
ஏற்கனவே குடிபோதையில் இருந்த குற்றவாளி, பாதிக்கப்பட்டவரிடம் மது அருந்தப் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தர மறுத்ததால் அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே வெல்டர் உயிரிழந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வெல்டடின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் கிடந்த ரத்தக்கறை படிந்த கத்தியையும் அவர்கள் மீட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றம் சாட்டப்படும் நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அக்டோபர் 26ஆம் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

