
முசிறியில் வீட்டின் பூட்டை உடைத்து, 15-சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 60-ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி நடராஜர் நகர் பகுதியில், நசுரூதீன் என்பவர், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, கடந்த 7 மாதங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், திருச்சி அடுத்த நொச்சியத்தில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், மாமனாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வாடகை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் அய்யம்பாளையம் அடுத்த சேந்தமாங்குடியில் உள்ள மாமனார் வீட்டிற்குச் சென்றார். அங்கு மாமனாரை பார்த்துவிட்டு, மீண்டும் குடும்பத்துடன், வீட்டிற்குத் திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவின் இருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 60-ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்றதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதனையடுத்து, முசிறி காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில், காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களை பதிவு செய்தனர். மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.




