தமிழ்நாடு முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறித் தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனரும் திமுக நிர்வாகியுமான அரசகுமாரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக 100 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிந்து சென்னை, திருச்சி நகரங்களில் அவருக்குச் சொந்தமான 6 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களும் டிஜிட்டல் ஆதாரங்களும் சிக்கியுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், சோதனை முடிவில் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேசுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கினர். இதன்படி, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜரானார்.


