
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டக்கல்லூரி அருகே ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மணப்படை வீடு பகுதியை சேர்ந்தவர் சுருளி ராஜன் (வயது 42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று தனது சொந்த பணி காரணமாக பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரி அருகில் காரில் வந்து பணியை முடித்து விட்டு திரும்பும் போது இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சுருளி ராஜனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுருளி ராஜன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடையவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கொலை தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர்.
மேலும் திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையர் ஆதர்த் பச்சேரா நிகழ்வு இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சுருளிராஜனின் உடலை காவல்துறையினர் உடனடியாக உடற்கூறாய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப் பகலில் திருநெல்வேலி, தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி அருகில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



