
சென்னை: புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏடிஎம் மையங்கள் முடங்கியதால் , பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மொபைல் போன் டவர்களும் முடங்கியதால் தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிந்து வருவதால், மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இணைய சேவையில் சிக்கல் நீடிக்கிறது.
இதனால், 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் முழுமையாக இயங்கவில்லை. இணைய மற்றும் சிக்னல் பிரச்னை மற்றும் பணம் நிரப்பப்படாத காரணத்தினால் ஏடிஎம்கள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. மொபைல் செயலிகளும் இயங்காததால், மக்கள் ஏடிஎம் மையங்களை நாடுகின்றனர்.
அங்கும் பணம் எடுக்க முடியாததால் அவதியடைந்து வருகின்றனர். இதனால், செயல்படும் சில ஏடிஎம்களில் பணம் எடுக்க பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் முழுமையாக இயங்கவில்லை.


