
மும்பை: மகாராஷ்டிராவில் அனைவராலும் கொண்டாடபடக்கூடிய பண்டிகையில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்த விழாவை மராத்தியர்கள் மட்டுமின்றி பிறமொழியாளர்களும் மதத்தினரும் வெகுவிமரிசையாகக் கொண்டாடி வழிபடுவார்கள். குறிப்பாக மண்டல்கள் எனப்படும் அறக்கட்டளை மற்றும் அமைப்புகள் சார்பாகப் பிரமாண்டமான மண்டபங்கள் பந்தல்கள் அமைக்கப்பட்டு களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவி 10 நாட்களும் பூஜைகள் செய்யப்படுகின்றன.

இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியிலிருந்து 50 அடிவரை விதவிதமாகவும், ஒவ்வொரு மையகருத்தாக்கத்திலும் செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை ஒன்றரை நாள், 3வது நாள், 5வது நாள், 7வது நாள், 9வது நாளென அருகில் உள்ள கடற்கரை, தெப்பக்குளம், செயற்கைகுளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
மும்பையில் லால்பாக் விநாயகர் சிலை மிகவும் பிரசித்திப் பெற்ற இடமாகும். இங்குப் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். பலர் நேர்த்திக்கடன்களையும் செய்வார்கள். தென்மும்பையை பொருத்தவரையில் தாதர், பைகுல்லா, பரேல், மாட்டுங்கா போன்ற பலப்பகுதிகளில் நிறுவப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளைப் பார்ப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள். மேலும், தென் மற்றும் மத்திய மும்பையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

கணபதி சிலைகள் மூன்று மாதத்திற்கு முன்பே சிலை செய்யத் தொடங்கிவிடுவார்கள் பெரிய கணபதி சிலைகள் மண்டபத்திற்கு முன்கூட்டியே கொண்டுவந்து மண்டப அலங்காரம் செய்யப்படுகின்றன. நேற்றய தினம் பெரிய மண்டல்களுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைக் கொண்டு சென்றனர். அங்கு இந்தச் சிலைகளை நிறுவி, அலங்காரப்பணிகள் தொடங்கும்.
பின்னர் விநாயகர் சதூர்த்தி தொடக்க நாளில் சிறப்பு பூஜையுடன் தொடங்கும். அப்போது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நேற்றய தினம் தென்மும்பையிலிருந்து விநாயகர் சிலைகளை வாகனத்தில் எடுத்துச் சென்றபோது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

