
நாங்குநேரி அருகே கோயில் விழாவில் மூதாட்டியிடம் 2.5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது…
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ராஜாக்கள் மங்கலம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கும்பாபிஷேக விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அப்போது கருங்குளத்தை சேர்ந்த மூதாட்டி மூக்கம்மாள்(58) என்பவர் அன்னதானம் வாங்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அங்கிருந்து மர்ம நபர்கள் யாரோ அவரது கழுத்தில் கிடந்த 2.5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சமாகும். இதனால் அதிர்ச்சி அடைந்த மூக்கம்மாள் கண்ணீர் விட்டு, கோவில் வாசலில் கதறி அழுதுகொண்டு இருந்தார்.இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் நகை திருடப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.மூதாட்டியிடம் நகையைத் திருடிய திருடர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

