
2006ஆம் ஆண்டு மும்பையில் ரயில்கள், ரயில் நிலையங்களில் குண்டுவெடித்ததில் 1896 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து அவர்கள் நாசிக் சிறைச்சாலையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் மும்பையில் உள்ளூர் ரயில்களிலும், மதுங்கா ரோடு, மகிம், பாந்த்ரா, ஜோகேஸ்வரி, பயேந்தர், போரிவாலி ஆகிய ரயில் நிலையங்களிலும் பிரசர் குக்கர்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 209 பேர் கொல்லப்பட்டனர். எண்ணூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் பைசல் சேக், ஆசிப் கான், கமால் அன்சாரி, நவீத் கான் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 12 பேரும் குற்றவாளிகள் என 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐந்து பேருக்கு மரணத் தண்டனையும், 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நேற்றுத் தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராகப் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி 12 பேரையும் விடுவித்தது. இந்த உத்தரவு கிடைத்ததையடுத்து நாசிக் சிறையில் இருந்து 12 பேரும் விடுவிக்கப்பட்டனர்.


