
தில்லியில் பதினோராயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துவாரகா விரைவு நெடுஞ்சாலை, நகர்ப்புற விரிவாக்கச் சாலை ஆகியவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
தில்லியில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பதினோராயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவாரகா விரைவுச் சாலை, நகர்ப்புற விரிவாக்கச் சாலை ஆகியன கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சாலைகள் திறக்கப்படுவதால் மாநகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் பயணநேரமும் கணிசமாகக் குறையும்.
பணி முடிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த வரைபடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி ஆகியோர் பார்வையிட்டனர்.
பிரதமருக்குத் திட்டத்தின் முழுவிவரங்களை அதிகாரிகள் விளக்கினர். அதைப் பார்வையிட்ட பிரதமர், சாலை மேம்பாலம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டார்.
பணி முடிக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் திறப்பு விழா இன்று தில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டப் பணிகளைச் செய்து முடித்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாகத் தில்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.



