
காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதலமைச்சர் ஜோசப்விஜய் சிக்க வேண்டாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க.தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது என்றும், 1960-களில் தொடங்கி 1990 வரை பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தத் தீர்வும் கிடைக்காததால்தான்,அது கைவிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
அதன்பிறகும் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்குவதில் அநீதி இழைத்து வந்தது கர்நாடக மாநில அரசு. என்றும், கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது என்றும், ஏனென்றால், பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றுமாகவே கர்நாடக மாநில அரசு செயல்படும் என்றும், உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும் என்றும், அதிலும் குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது, தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பதாகும் என்றும், எனவே, இதுகுறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை என்பதே நமது நிலைப்பாடாகும் என்றும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி நீருக்காக, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் சிக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


