
மேற்கு வங்கச் சட்டப் பேரவைத் தேர்தலின்போது மத்திய ரிசர்வ் காவல் படையினரும், தேர்தல் பார்வையாளர்களும் சேர்ந்து பொதுமக்களைத் தாக்கியதாகத் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியத் துணை இராணுவப் படையினர் தங்கள் கட்சியினரைத் தேர்தலுக்கு முந்தைய நாள் இரவே கைது செய்துள்ளதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் கூறினார்.
எந்த வாக்குச்சாவடியிலும் மாநிலக் காவல்துறையினர் இல்லை என்றும், எல்லாவற்றையும் மத்திய ரிசர்வ் காவல்படையினர் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் எல்லையைக் காப்பதற்குப் பதில் ஒரு கட்சியைக் காப்பதற்குக் களமிறங்கி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
1984ஆம் ஆண்டு முதல் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும், இந்த முறைபோல் எப்போதும் அட்டூழியத்தைக் கண்டதில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
மத்திய ரிசர்வ் காவல்படையினரும் தேர்தல் பார்வையாளர்களும் சேர்ந்து மக்களைத் தாக்கியதாகவும், பெண்கள் குழந்தைகளைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்றும் மம்தா குற்றஞ்சாட்டினார்.



