
வயநாட்டில் வசித்து வந்த மலையாள இயக்குனர் பிரகாஷ் கொலேரி, வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 1987-ம் ஆண்டு வெளிவந்த மிழிஇதழில் கண்ணீருமாய் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரகாஷ் கொலேரி. கேரள மாநிலம் வயநாட்டில் தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்த கொலேரி, வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
65 வயதான கொலேரி, வீட்டிலிருந்து கடந்த இருநாட்களாக வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பெயரில் அவரின் வீட்டைத் தட்டி பர்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், வீட்டின் பூட்டை உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்து பார்த்தபோது இறந்த நிலையில் கிடந்துள்ளார் கொலேரி. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.
இயக்குனர் கொலேரியின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொலேரியின் மறைவு தற்கொலையா அல்லது யாரேனும் அவரைக் கொலை செய்துவிட்டார்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


