
தமிழ் திரையுலகில், சமூக கருத்துக்களால் மனதை நொறுங்கவைக்கும் அளவுக்கு கதைகளை எடுப்பதில் மிகவும் சிறந்தவர் தான் மாரி செல்வராஜ். இவர் தமிழ் நடிகைகள் மட்டுமல்லாது பிற மொழிகளான மலையாளம், தெலுங்கு நடிகைகளையும் வைத்து படம் இயக்கியுள்ளார் .
மேலும் இது சார்ந்து இவர் மேல் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது . மேலும் இது குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், நடிகை ஆராத்யா எழுப்பிய கேள்வி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.
மாரி செல்வராஜ் இயக்கிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தாலும், ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்றப் படங்களில் அவர் தொடர்ந்து மலையாளம் அல்லது பிற மொழி நடிகைகளை நடிக்க வைப்பதாகத் தமிழ்த் திரையுலகில் ஒரு விமர்சனம் இருந்து வருகிறது.
இந்த விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் விளக்கமளித்திருந்தார். அந்த விளக்கமே தற்போது ஆராத்யாவின் கேள்விக்குக் காரணமாக அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் கூறியிருப்பதில் , “டெடிகேட்டிவ் ஆன ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன். அது மலையாளி என்றால் கூடப் பிரச்சனையில்லை. மற்ற மொழி நடிகைகள், நாங்கள் என்ன மாதிரியானக் கேரக்டர் கொடுத்தாலும், என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எங்களுக்குக் கொடுக்கிறார்கள். அதுபோல, நாங்கள் மனதில் வைத்திருக்கும் கேரக்டருக்குச் சிலருடைய முகங்களும் நடிப்பும் எங்களுக்குச் சரியாகப் படுகிறது. அதனால் நாங்கள் மற்ற மொழி நடிகைகளைத் தேர்ந்தெடுக்கிறோம்.”
“நாங்கள் எதிர்பார்ப்பது போலத் தமிழ் நடிகைகள் இருந்தால் கண்டிப்பாக அவர்களையும் நாங்கள் பயன்படுத்துவோம்” என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். இந்தக் கருத்தைப் பற்றித்தான் நடிகை ஆராத்யா, ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’ விழாவில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார்.
விழா மேடையில் நின்று இயக்குநர் மாரி செல்வராஜை நோக்கிக் கேள்வியெழுப்பிய ஆராத்யா, “தமிழிலும் அர்ப்பணிப்புடன் நடிக்கிற நடிகைகள் இருக்கிறோம், சார். நாங்களும் தமிழில் டெடிகேட்டிவ் ஆன ஆர்டிஸ்ட் ஆகத் தான் இருக்கிறோம். எங்களால முடிஞ்ச effort போடுறோம். உங்கள் காதுகளுக்கு அது வந்து சேரல” என்று மிகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.


