Ma. Subramanian: அடுத்த வாரத்தில் 100 சதவீதம் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்படும்!

Advertisements

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் 1622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் (NABL) சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன்:தமிழ்நாட்டில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இது மிக முக்கியமான நாள்.

2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இதில் சென்னை நீங்கலாக மற்ற ஊர்களில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை பரிசோதனை கூடங்கள் உள்ளது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட 29 வகையான பரிசோதனைகள் இதில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரிசோதனைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. Nabl வாரியம் இந்திய தரக் கவுன்சிலின் ஒரு அங்கமாக உள்ளது. அதில் தரச் சான்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியது. அதில் முதன் முதலாகத் தமிழ்நாட்டில் இந்த அங்கீகார சான்றிதழ் 1622 ஆய்வகங்களுக்கு கிடைத்துள்ளது. ஒட்டு மொத்த தமிழர்களும் இது ஒரு மிகப் பெரிய பெருமை.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் இதுவரை  1 கோடியே 70ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

332 லேப் டெக்னீஷியன் பணியிடங்களுக்கும் எம்.ஆர்.பி மூலம் நாளைச் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது. அடுத்த வாரத்தோடு தமிழகத்தில் 100 சதவீதம் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்படும்.அதற்குப் பின் கலந்தாய்வு நடைபெற்று பணி ஆணைகள் வழங்கப்படும்.

புதிய பணியிடங்களுக்கு 1021 மருத்துவ பணியிடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்று அவர்கள் விருப்பத்திற்கு ஏற்பப் பணி ஆணைகள் வழங்கினோம். இந்த ஆட்சியில் ஏராளமான விருதுகள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைக்குக் கிடைத்துள்ளது.

சென்ற ஆட்சியில் ஐந்தாண்டுகளில் பெற்ற விருதுகளைவிட 2.5 ஆண்டுகால திராவிட  ஆட்சியில் பல விருதுகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை பெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான விருதுகள் 2 1/2 ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குக் கிடைத்துள்ளது. 10999  கிராமப்புற சுகாதார நிலையங்களில் இதயம் காப்போம் என்னும் திட்டத்தைத் துவக்கி வைத்தோம். அதில் 14 மாத்திரைகள் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் 6 மாதத்தில் 5947 பேர் பயன்பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்துசெய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன். சென்னை நீங்கலாக 2127 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுள் 1622 அரசு ஆரம்பசுகாதார நிலைய ஆய்வங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மக்களைத் தேடி ஆய்வகம் என்னும் திட்டம்மூலம் 34 ஆய்வகங்கள் கடந்த வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கப்பட்டது.

அனைத்து நபர்களையும் முழுவதுமாக அழைத்தால் பணி பாதிக்கும் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கை அழைத்துக் கொடுத்துள்ளோம். 1622 ஆய்வங்களுக்கான சான்றிதழ்களை அவர்களிடம் ஒப்படைப்பக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புகள் சிறப்பாக உள்ள காரணத்தினால் தான் ஒன்றிய அரசு பல விருதுகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது.

கடந்த வாரத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. எம்.ஆர்.பி மூலம் லேப் டெக்னீசியன் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு 332 பேருக்குப் பணி நியமன ஆணை அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது.

உடலுறுப்பு தானம் தமிழ்நாட்டில் மிகவெளிப்படையாக நடக்கிறது கடந்த ஆண்டு வெளிப்படைதன்மை உள்ளதால்  உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் முதல் மாநிலமாகத் தேர்வு செய்தனர். உறுப்புத் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை என்பதை தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்கள். தற்பொழுது அதனைப் பார்த்து ஒடிசா மாநிலத்திலும் இந்தத் திட்டத்தை இப்போது அறிவித்துள்ளார்கள்.

உறுப்புத் தானம் முறையாகச் செயல்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் முறைகேடுகள் ஏதேனும் நடந்தால் எத்தனை பெரிய நிர்வாகமாக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டு ஜனவரி 31ஆம்  தேதிவரை 31 நாட்களில் 33பேரும் பிப்ரவரியில் இதுவரை 10 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர்.

திமுக அரசு அமைந்த பின் உடல் உறுப்புத் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை செய்யபடும் என்ற அறிவிப்பிற்கு பின் மட்டும் கடந்த ஆண்டு மட்டுமே 166 பேர் தானம் செய்துள்ளனர். இன்னும்  ஆயிரக்கணக்கானோர் உடலுறுப்பு தானம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *