
மதுரை:
மதுரை மாநகரின் கோரிப்பாளையம் பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.190 கோடியில் கட்டப்படுகிறது.
இந்த மேம்பாலம் தமுக்கம் மைதானம் முன்பு இருந்து தொடங்கி கோரிப்பாளையம் வழியாக ஏ.வி. மேம்பாலத்துக்கு இணையாக மீனாட்சி கல்லூரி வழியாகச் சிம்மக்கல் வரை 2 கி.மீ. தொலைவுக்குச் செல்கிறது. இந்தப் பாலத்தில் செல்லூரை நோக்கிச் செல்லும் பாலம் ஸ்டேஷன் சாலையில் மட்டும் ஒரு இணைப்புப் பாலம் கட்டப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகச் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்த நிலையில் பாலம் கட்டுமான வேலைகள் பாதித்தன. இருப்பினும் தொழிலாளர் பாலத்திற்கான கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மழை காரணமாகக் கான்கிரீட் கட்டுமானம் தொடர்ந்து ஈரப்பதத்தோடு இருந்தது. இந்த நிலையில் அந்தக் கான்கிரீட் தளம் திடீரெனச் சரிந்து விழுந்தது.
கான்கீரிட் கட்டுமானத் தோடு இரும்பு சாரங்களும் சாய்ந்து கீழே விழுந்தது. இதில் தொழிலாளர்கள் திருச்சி துறையூரை சேர்ந்த பழனி, அய்யங்காளை, காளி, ஜெய்சன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிய அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேம்பால கட்டுமானத்தின்போது கான்கிரீட் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் பறக்கும் பாலம் கட்டுமான பணியின்போது நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.


