
பாஜகவின் வெறுப்பு அரசியலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டும் என நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்…
இந்தியாவுக்காகப் பேசுகிறேன் என்ற தலைப்பில் எக்ஸ் வலைத்தளத்தில் ஆடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டின் அடிப்படை கட்டமைப்பைச் சிதைக்க பாஜக முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாடல் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமரின் மாடல் என்ன என்று தெரியவில்லையெனக் கேள்வி எழுப்பிய அவர், ஏர் இந்தியா, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய பாஜக அரசு சிதைத்து விட்டதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், நெருக்கமான தொழிலதிபருக்காகப் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல், மத உணர்வைப் பிரதமர் கையில் எடுத்துள்ளதாகச் சாடினார்.
2002ல் குஜராத்தில் விதைத்த வன்முறை மணிப்பூர், ஹரியானா மாநிலங்களில் வரை பரவி அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு வாங்கி உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு முத்திரை திட்டங்களாக எதையும் மத்திய அரசு கொண்டுவரவில்லையெனச் சாடினார்.
சமூக நிதி, சமத்துவம் காப்பாற்றுவதற்காகத் தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும், பாஜகவின் வெறுப்பு அரசியலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டும் என நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்! #Speaking4India pic.twitter.com/C60TrlPTOG
— M.K.Stalin (@mkstalin) September 4, 2023


