“வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது ஜனநாயகம் அல்ல” – துரை வைகோ அதிரடி!

Advertisements

மதிமுக தற்போது வரை திமுக கூட்டணியில்தான் நீடித்து வருவதாகவும், கூட்டணி குறித்த இறுதி முடிவு வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு கட்சியும் தங்களின் சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவதுதான் அடிப்படை உரிமை என்றும், பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவது ஜனநாயகம் ஆகாது என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணிக் கொள்கை குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

அப்போது அவர், “மதிமுக தற்போது வரை திமுக கூட்டணியில்தான் தொடர்கிறது. வரும் ஜூன் 27ஆம் தேதி மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டு, கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் சொந்தச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும். அதுவே அந்தந்தக் கட்சியின் அடிப்படை உரிமை. அதை விடுத்து, மற்றொரு கட்சியின் சின்னத்தில் நின்று போட்டியிடுவது உண்மையான ஜனநாயகம் கிடையாது” எனத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கூட்டணி கட்சிகள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டதை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *