
நிலம் கையகப்படுத்தும் பணிகள் திமுக அரசிடம் நிலுவையில் உள்ளதாலேயே பல முக்கிய திட்டங்கள் வருவதற்கு தாமதமாகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் கிராமத்தில் அதிமுக சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இக்கூட்டத்தில்,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது, ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தில் இருந்து 24 சதவீதம் மட்டுமே திமுக அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் நிலம் கையகப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பொய் என்றும் தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளதாலேயே பல முக்கிய திட்டங்கள் வருவதற்கு தாமதமாகிறது என்று குற்றம் சாட்டினார். மத்திய பட்ஜெட்டில் புற்றுநோய் உள்ளிட்ட ஏழு அரிய வகை நோய்களுக்கு வரி விலக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றும் இதையெல்லாம் மூடி மறைத்து விட்டு மத்திய அரசு மீது பழி சுமத்துவதையே தன்னுடைய வாழ்நாள் கடமை என்று திமுகவினர் பேசிவருவதாகத் தெரிவித்தார்.


