Lok Sabha Elections 2024: 6 மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூடப் பதிவாகவில்லை..4 லட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் தெரியுமா?

Advertisements

நாகாலாந்தில் 6 மாவட்டத்தைச் சேர்ந்த 4 லட்சம்  மக்கள் வாக்களிக்காமல் நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. இந்த 102 தொகுதிகளில் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தின் ஒரு தொகுதியும் அடங்கும். இந்நிலையில் தேர்தலுக்காகக் கிழக்கு நாகலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இன்று காலை 11 மணி நிலவரப்படி, வாக்களர்கள் எவரும் வாக்கு செலுத்த வரவில்லை. மதியம் வரையிலுமே ஒரு வாக்குகள் கூடப் பதியவில்லை. இதனால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, அம்மாநில தேர்தல் தலைமை அதிகாரி ‘கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்புக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

“கிழக்கு நாகலாந்து மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் விஷயத்தில் தலையிட்டுள்ளீர்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே  இந்திய தண்டனைச் சட்டத்தின் 171-சி’யின் உட்பிரிவின் கீழ் ஏன் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு இஎன்பிஓ அமைப்பும் பதிலளித்துள்ளது. அதில்,

“எங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட கிழக்கு நாகாலாந்து பகுதியில் ஏற்படும், இடையூறுகள் மற்றும் சமூகவிரோதிகளால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதுதான் எங்களது குறிக்கோள். கிழக்கு நாகாலாந்து பகுதி தற்போது பொது அவசரநிலையில் உள்ளது. இது மக்கள் எடுத்த முடிவு. இதற்கு எப்படி இந்திய தண்டனை சட்டம் 171 சி பொருந்தும்? நாங்கள் யாரையும் தடுக்கவில்லை. இது தவறான புரிதல். இதுகுறித்து விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.

இந்த முடிவு ஏதோ ஓரிரு நாளில் எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க கிழக்கு நாகாலாந்து மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

கிழக்கு நாகலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில், 7 நாகா பழங்குடி இனங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு தனி மாநிலம் கேட்டு நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு, புதிய மாநிலம் அமைப்பதாக வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் தற்போது ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த 6 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் மக்களும் இன்று வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *