
நியூயார்க்: டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனை ‛ எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் அவர் உறுதி செய்துள்ளார்.
எலான் மஸ்க் இம்மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் இந்தியாவுக்கு வர இருந்தார். அப்போது, பிரதமர் மோடியை அவர் சந்திப்பாரென அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, அவரது ‛ஸ்டார்லிங்க்’ நிறுவனத்துக்கான உரிமம் விண்ணப்ப வேலைகளைத் தொலைத்தொடர்பு துறை துரிதப்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்திய பயணத்தையும், பிரதமர் மோடியை சந்திக்கவும் ஆர்வமாக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்தப் பயணத்தின்போது, டெஸ்லா நிறுவனம் 2 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகின. டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை ஈர்ப்பதில் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் மும்முரம் காட்டி வந்தன.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக எலான் மஸ்க் ‛எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
துரதிர்ஷ்டவசமாக, டெஸ்லா நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக எனது இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்திய பயணத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

