
தமிழக சட்டப்பேரவையில் இன்று த.வெ.க. அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான 108 இடங்களை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது.
இதையடுத்து, ஆட்சி அமைக்க 118 என்ற எண்ணிக்கை தேவை என்பதால், மற்ற கட்சிகளில் ஆதரவை தவெக தலைவர் விஜய் நாடினார். இதன்படி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். இவருடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதன் பின்னர், 17 வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடிய நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், துணைத் தலைவர் ரவி சங்கர், கொறடாவாக சபரிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்தி, சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.
இதில், அவையில் உள்ள உறுப்பினர்கள் கலந்துகொண்டு சரிபாதிக்கு மேல் வாக்களிக்க உள்ளனர். குரல் வாக்கெடுப்பு மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கை மூலமாகவோ வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


